×

வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை வனத்துறையினர் விசாரணை ஒடுகத்தூர் அருகே

ஒடுகத்தூர், மே 9: ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் மர்மமான முறையில் காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலப்பாடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும் மற்றும் மலைகளும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்குள்ள காடுகள் ஆம்பூர் வனச்சரகத்திற்கும், ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கும் உட்பட்டது. இதனை சாணாங்குப்பம் காப்புக்காடு என்று அழைப்பர். இந்த காப்புக்காடு மான்கள், மயில்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், பாம்புகள், காட்டு முயல்கள், பறவைகள் உட்பட ஏராளமான வனவிலங்குகளுக்கு வசிப்பிடமாக இருந்து வருகிறது. மேலும், வனப்பகுதியில் அரியவகை மூலிகை செடிகள், மரங்களும் உள்ளது.

இந்த வனவிலங்குகளை வனத்துறையினர் கண்காணித்து வருவதோடு மட்டுமின்றி மரங்களையும் பராமரித்து வருகின்றனர். மேலும், கோடை காலங்களில் வனவிலங்குகளின் தாகத்தை போக்கும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியையும் செய்து வருகின்றனர். அதேபோல், பாலப்பாடி மலை மீதுள்ள தர்மகொண்டராஜா கோயில் அருகே உள்ள குளத்திலும் வனவிலங்குகள் தண்ணீர் குடித்து விட்டு செல்லும்.
இந்நிலையில், நேற்று காலை வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தனர்.

உடனே ஒடுகத்தூர் மற்றும் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர்கள் இந்து, பாபு ஆகியோர் கொண்ட வனத்துறையினர் வந்து இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, வனப்பகுதிக்குள் ஜேசிபி மூலம் 10 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு சடலத்தை புதைத்தனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை வனத்துறையினர் விசாரணை ஒடுகத்தூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Odukathur ,Odugathur ,Vellore district ,Guruvarajapalayam Panchayat ,Palappadi ,
× RELATED உத்திர காவிரி ஆற்றில்...